sp velumani
sp velumani pt
தமிழ்நாடு

“வெறும் 3% வச்சிருக்க பாஜகவில் நான் சேருவேனா? அதற்கு பதில் சொல்லணுமா? Don't care” - எஸ்.பி.வேலுமணி!

யுவபுருஷ்

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளருமான சிங்கை ராமச்சந்திரனின் தந்தையுமான சிங்கை கோவிந்தராஜனின் 25வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராமன் மற்றும் சூலூர் கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அப்போது, நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராஜன் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும், “யாரெல்லாம் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. You tube போன்ற சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அதையெல்லாம் நான் பார்ப்பதில்லை, ஆனால் அந்த தகவலை பார்த்து அண்ணன் அம்மன் அர்ஜுனன் கோவப்பட்டார். அதை பற்றியெல்லாம் பேசினால் நமக்கு நேரம் வேஸ்ட். அதிமுக என்பது தாய் வீடு. அனைவரும் தாய் வீட்டிற்குதான் வருவார்கள். யாரும் வெளியே போகமாட்டார்கள் என்று பேசினார்.

தொடர்ந்து, தான் அதிமுகவில் இருந்து பாஜக உள்ளிட்ட வேறு கட்சியில் இணையப்போவதாக பரவும் வதந்திகள் குறித்து பேசிய அவர், ”உலகிலேயே 7ஆவது பெரிய கட்சி அதிமுக. இது நம்ம கட்சி, சாதாரன குடும்பத்தில் பிறந்த நம்மை எம்.எல்.ஏ வாக, அமைச்சராக மாற்றி அழகு பார்த்தவர் அம்மா. அப்படி இருக்க வெறும் 3 முதல் 4 சதவீதம் வாக்கு வங்கியை வைத்துள்ள பாஜகவில் நாம் சேர போகிறோம் என்று கூறினால், அதற்கு நாம் பதில் கூற வேண்டுமா?.

தமிழகத்தில் 35 முதல் 40 சதவீத வாக்கு வங்கியை அதிமுக வைத்துள்ளது. மாற்று கட்சியில் சேரப்போகிறோம் என்ற வதந்திக்கெல்லாம் பதில் கூற வேண்டாம். டோன்ட் கேர் ( don’t care ) என விட்டுச்செல்லுங்கள், கவலைப்படாதீர்கள். பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ள நமக்கு காலரை தூக்கி சென்று நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை கேட்கும் தகுதி உள்ளது. எடப்பாடியாருக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை தேடி தருவதுதான் லட்சியம்” என்றும் தெரிவித்தார்.