செல்வப்பெருந்தகை, அதிமுக எதிர்க்கட்சியாக கூட வராது என கூறினார். திமுகவின் பல திட்டங்கள் மற்றும் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழ்நாடு முன்னேறி வருவதை அவர் பாராட்டினார். அதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவின் கட்டளைகளை பின்பற்றுவதாகவும், எதிர்கட்சியாகவும் வர முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மாநிலங்களை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டணிக்காக செல்வப்பெருந்தகையின் முயற்சி பெரிதளவில் பேசப்பட்டுவரும் நிலையில், நேற்று சென்னை மண்ணடியில் திமுக சார்பில் நடைபெற்ற 'மக்கள் முதல்வரின் மனிதநேய விழா' பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் பங்கேற்றார்.
இப்பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, எல்லோரையும் பாஜகவுக்கு பிடிக்கும். ஆனால், முதலமைச்சரை பார்த்தால் மட்டும் பாஜக அச்சப்படுகிறது. டெல்லி சுல்தான் இடும் கட்டளைகளை செயல்படுத்துபவர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டை டெல்லிக்கு எழுதி கொடுங்கள் என்றால் முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி பத்திரம் போட்டு கொடுத்து இருப்பார்.
எவ்வளவு தொந்தரவு கொடுத்தார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை. இப்படி பல தொந்தரவு கொடுத்தாலும் அதனை எல்லாம் உடைத்து எறிந்த தலைவர் மு.க.ஸ்டாலின். அதனால் தான் அவர் மனிதநேய தலைவர்.
கலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி , மக்களை தேடி மருத்துவம், இன்னுயிரை காப்போம் திட்டம் என பல உன்னதமான திட்டங்கள் கொண்டுவந்தார். நான் முதல்வன் திட்டம், புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் கொடுத்தார். இந்தியா கண்டிராத தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
2021 இல் ஆட்சி பொறுப்பு ஏற்கும் பொது தமிழ்நாடு எந்த நிலையில் இருந்தது. இப்போது எந்த நிலையில் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம். முதன்மை தொழில் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாடு கடன் வாங்குகிறது என்று குற்றஞ்சாட்டுகின்றார் எடப்பாடி பழனிசாமி. கடனை திரும்ப கட்டும் திராணியற்றவர் எடப்பாடி. ஆனால் கடன் கொடுத்தால் திரும்பி கொடுக்கும் திராணி உள்ளது திராவிட மாடல் அரசு.
எடப்பாடி பழனிசாமி எழுதி கொடுப்பதை அப்படியே படிப்பார். இப்பொழுது டெல்லி எழுதிக் கொடுப்பதை அப்படியே படிக்கிறார்.
எடப்பாடி கூட்டத்தில் ’பார்த்திங்களா கொடி பறக்கிறது’ என சொன்னபிறகும் யாரும் வரவில்லை. ஆனால் காங்கிரஸ் திமுக பிரிந்துவிடும் என்றார் எடப்பாடி.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ராகுல் காந்தி அவர்களும் அண்ணன் தம்பியாக உள்ளனர். காங்கிரஸ் திமுக கூட்டணி அமைப்பது விட்டதால் அதிமுகவினர் படுத்து தூங்கி விட்டனர். அதிமுகவில் சீட் கேட்க கூட ஆள் இல்லை.
இந்தியாவில் ஒரே ஒரு முதலமைச்சருக்கு ஆட்சியின் மீது எதிர்ப்பு அலை இல்லாமல் ஆதரவு அலை உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எதிர்க்கட்சியாக கூட வராது என்ற நிலை உள்ளது. 210 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று பேசினார்.