செல்வப்பெருந்தகை கோப்பு படம்
தமிழ்நாடு

’STANDUP COMEDY’-ல் முன்னாள் பிரதமர் நேரு அவமதிப்பு.. நடவடிக்கை எடுக்க செல்வப்பெருந்தகை கோரிக்கை!

STANDUP COMEDY என்ற பெயரில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பற்றி கிண்டலடித்துப் பேசிய பரத் பாலாஜி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.

Prakash J

இன்று மக்களைச் சிரிக்கவைக்க நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் எதை எதையோ செய்கிறார்கள். அந்த வகையில், தற்போது ஸ்டேண்டு அப் காமெடி பிரபலமாகி வருகிறது. இதில் சமூக மற்றும் அரசியல் தாக்கங்கள் இருந்தாலும், தேசத் தலைவர்களைப் பற்றிப் புண்படுத்தும் விஷயங்களும் அதிகமாகி வருகின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான் தற்போது நடைபெற்றுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பரத் பாலாஜி என்பவர், STANDUP COMEDY என்ற பெயரில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் பற்றி கிண்டலடித்துப் பேசுகிறார். இதைக் கேட்டு மக்களும் சிரிக்கின்றனர். இந்த நிலையில், STANDUP COMEDY என்ற பெயரில் நேருவைக் கொச்சைப்படுத்தி பேசிய பரத் பாலாஜிக்கு எதிராகப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். தவிர, அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ”STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன்.

புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகிவிட்டது. கண்ணியக்குறைவான இவரின் பேச்சு, காங்கிரஸ் பேரியக்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினருக்கும் மிகுந்த மனவுளைச்சலை உண்டாக்கியுள்ளது.

வரலாறு குறித்து எள்ளளவும் அறியாத இவர்மீது தமிழ்நாடு காவல்துறை கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்யவேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய முறையில் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என அதில் பதிவிட்டுள்ளார்.