விஜய், சீமான் pt web
தமிழ்நாடு

“அண்ணே.. ஒன்னு மட்டும் சொல்லட்டுமா” சீமானின் பணக்கொழுப்பு என்ற விமர்சனத்துக்கு தவெக பதிலடி

விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பைப் ‘பணக்கொழுப்பு’ என்று குறிப்பிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தவெக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கேஷ்வர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜேந்திர சோழன் பிறந்த நாள் பெருவிழா கூட்டத்தில் அவதூறாக பேசியதாக சீமான் மீது வழக்கு தொடரபட்டது. இவ்வழக்கு தொடர்பாக செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் எத்தனை ஏரி குளம் எத்தனை மக்கள் எவ்வளவு வாக்கு சதவீதம் என எதுவுமே தெரியாத பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் வகுத்து என்ன செய்து விடப் போகிறார். மேலும், பண கொழுப்பு தான் சந்திப்புக்கு காரணமாக உள்ளது” எனக் கடுமையாக சாடினார்.

சீமான்

இந்நிலையில், சீமானுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளருவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் "வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி" என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை?

திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணன் சீமானுக்கு திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று.

அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

நாங்கள் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம் நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள்.

விஜய்

பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள்.

ஒன்று சொல்லட்டுமா அண்ணே, எங்கள் தலைவர் தளபதி விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே....” எனத் தெரிவித்துள்ளார்.

லயோலா மணி தனது எக்ஸ் தளத்தில், “உழைத்து சம்பாதிப்பதற்கும், திரள் நிதி மூலம் சம்பாதிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. திரள் நிதியால் கொழுப்பை வளர்த்து கொண்டிருப்பவர்கள் எங்களை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.