seeman x page
தமிழ்நாடு

நாளை வேட்பாளர்கள் அறிவிப்பு.. சொந்த தொகுதியில் களமிறங்கும் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொந்த மண்ணான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Prakash J

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொந்த மண்ணான சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. அதில் நாம் தமிழர் கட்சியும் வேகம் காட்டி வருகிறது. 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2016 முதல் தேர்தலைச் சந்தித்து வருகிறது. என்றாலும், ஆரம்ப காலம் முதல் அனைத்துத் தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. இந்த தேர்தலிலும் தனித்தே களம் காண உள்ளது. மொத்தம் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களின் பெயர்கள் நாளை திருச்சியில் நடைபெறும் கட்சி மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளன. திருச்சியில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகப்படுத்த உள்ளார். 234 தொகுதிகளில் 117 ஆண்கள்,117 பெண்கள் எனச் சம வாய்ப்புடன் வேட்பாளர்களை அவர் களமிறக்க உள்ளார். சீமான் தனது சொந்த மாவட்டமான காரைக்குடி தொகுதியிலும், வீரப்பன் மகள் வித்யாராணி மேட்டூரிலும், இடும்பாவனம் கார்த்திக் வேதாரண்யத்திலும், இயக்குநர் களஞ்சியம் ஆயிரம் விளக்கிலும் போட்டியிட உள்ளனர்.

seeman

மேலும், நட்சத்திரப் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல், மாநிலம் முழுவதும் சீமானுக்காக பரப்புரை செய்யப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016இல் கடலூரிலும், 2021இல் திருவொற்றியூரிலும் சீமான் போட்டியிட்டார். ஏற்கெனவே சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் 16 சதவீதத்திற்கும் மேலாக வாக்குகளைப் பெற்று டெபாசிட் வாங்கியதால் இம்முறை காரைக்குடியில் சீமான் களமிறங்குகிறார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவரது 8 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் அவரது கட்சிக்கு மாநில அந்தஸ்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.