ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கிராம மக்களுடன் வந்த சீமானின் தாயார் அன்னம்மாள் pt web
தமிழ்நாடு

சிவகங்கை | 100 நாள் வேலை.. கிராம மக்களுடன் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்ற சீமான் தாயார் அன்னம்மாள்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 100 நாள் வேலை கேட்டு கிராம மக்களுடன் சேர்ந்து வந்துள்ளார்.

PT WEB

இளையான்குடி அருகே அரணையூர் கிராம மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் பணி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இக்கிராம மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனை அடுத்து இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் சந்தித்து மீண்டும் தங்களுக்கு பணி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இவர்களோடு இக்கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னம்மாளும் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்குமாறு கேட்டு வந்திருந்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 100 நாள் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனை அடுத்து சீமானின் தாயார் அன்னம்மாள் நாம் தமிழர் கட்சி கொடி கட்டி வந்த பொலேரோ வாகனத்தில் ஏறி சென்றார்.