தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரியலூர், தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், விழுப்புரம், கடலூர், திருச்சி, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, கோவை, திருப்பூர், மதுரை, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவாரூர், அரியலூர், கரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நெல்லையில் பிற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்தும் தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த மாவட்டங்களில், அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, 10 மணி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.