செய்தியாளர்: V.M.சுப்பையா
கோவையில் பூப்பெய்திய தனியார் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்த விவகாரம். பள்ளி முதல்வர், உள்ளிட்டோர் சரணடையும் நாளில் ஜாமீன் மனுக்களை பரிசீலிக்கும்படி கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பூப்பெய்திய 8ம் வகுப்பு மாணவியை, வகுப்பறைக்கு வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். பள்ளி மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் படியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை நெகமம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்த நாளில் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிடக் கோரி தங்கவேல் பாண்டியன், ஆனந்தி, சாந்தி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மூவரும் சரணடையும் நாளில் ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி கோவை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.