கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணைக் கோரிய தவெக-வின் மனு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மனு உள்ளிட்ட ஐந்து மனுக்களின் மீதான தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (அக்- 13) அறிவிக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கரூரில் கடந்த மாதம் செப்டம்பர் - 27 ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்ப்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்து.
இந்நிலையில், இந்த மோசமான சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம் என காவல்துறை கூறியது. இதையடுத்து இந்த சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் நியமிக்கப்பட்டது.
ஆனால் தவெக தரப்பில் இருந்து கரூர் கூட்ட நெரிசல் சம்பந்தமாக சிபிஐ விசாரணைக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டனர். இந்நிலையில், சிபிஐ விசாரணைக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது தவெக. அதுமட்டுமில்லாமல் உயிரிழந்தவர்கள் குடும்பத்திலிருந்தும் சிபிஐ விசாரணை கோரி மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்நிலையில் சிபிஐ விசாரணைக் கோரிய 5 மனுக்களின் மீதான விசாரணை நீதிபதி ஜே. கே. மகேஸ்வரி , என்.வி. அஞ்சாரியா
தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக தரப்பில், காவல் துறையின் அறிவுறுத்தலின்படியே நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார் என வாதாடப்பட்டது. உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பில், பரப்புரையில் ரவுடிகள் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. சிபிஐ போன்ற பொதுவான ஒரு அமைப்பு விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அரசு தரப்பில் நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என வாதம் முன்வைக்கப்பட்டது. 12 மணிக்கு வருவதாக கூறிவிட்டு மிகத் தாமதமாக வந்ததே காரணம் என்றும், அரிதினும் அரிதான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ தேவை என்றும், உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரவுடிகள் நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று மறுப்பு தெரிவித்ததுடன், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இரவில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் எந்தத் தவறும் இல்லை என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இவ்வழக்கில் வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதியுடன் இரவில் பிரேதப் பரிசோதனை நடத்தலாம், இது வழக்கமான ஒன்றுதான் என்றனர். உடற்கூராய்வுக்கு எத்தனை மேசைகள் இருந்தன, மருத்துவக் கட்டமைப்பு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்கவும் அனுமதி அளித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணையை இன்று தொடர்ந்த நீதிபதிகள் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 13) தீர்ப்பளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: சீ. பிரேம்குமார்