செய்தியாளர்: மோகன்ராஜ்
சேலம் கொண்டாலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன், சிவதாரபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு பணியை முடித்துவிட்டு மகேஸ்வரன் மற்றும் விற்பனையாளர் குழந்தைவேலு ஆகியோர் இருசக்கர வாகனத்தில வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இதையடுத்து மீட்புப் பணிக்காக வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஆதிசேஷன் காயமடைந்து மயக்க நிலையில் இருந்தவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்டுள்ளார். உடனடியாக காயமடைந்தவர்களையும் அவர்களின் உடைமைகளையும் மீட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து கைப்பற்றிய 5 லட்சத்து 62 ஆயிரத்து 660 ரூபாய் பணம் மற்றும் செல்போன்களை காவல்துறையினர் முன்னிலையில் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
பொறுப்புடன் நேர்மையாக கடமையாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியருக்கு காவல்துறையினர் மற்றும் அரசு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.