மதுரை | நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் வெட்டிக் கொலை – போதையில் ஆள் மாறி கொலையா?
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணி (31). இவர், மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் பயணிகளை பேருந்துகளில் அனுப்பி வைக்கும் டிக்கெட் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு திடீர் நகர் சந்தன மாரியம்மன் கோயில் முன்பு நண்பர்களுடன் நின்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ராமசுப்ரமணியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இதில் ராமகிருஷ்ணனுக்கு தலை, நெற்றி, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக திடீர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மது போதையில் இருந்த கும்பல் ஆளை மாற்றி கொலை செய்தார்களா? என்பது குறித்தும் வேறு ஏதும் காரணமா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.