காரில் கடத்தப்பட்ட கர்ப்பிணி பெண் - 6 பேர் கைது pt desk
தமிழ்நாடு

சேலம்: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு – காரில் கடத்தப்பட்ட கர்ப்பிணி பெண் - 6 பேர் கைது

எடப்பாடி அருகே கர்ப்பிணி பெண்ணை காரில் கடத்திச் சென்ற அப்பா, அம்மா உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: பாலகிருஷ்ணன்

சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தனுஷ்கண்டன், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த ரோஷினி ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு ரோஷினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து காதல் திருமணம் செய்த இருவரும் எடப்பாடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், காதல் திருமணம் செய்த இருவரும் செட்டிமாங்குறிச்சியில் வசித்து வந்தனர். ஏழு மாதத்திற்குப் பிறகு ரோஷினியின் தந்தை குமாரசெல்வம் ஏற்பாட்டில் காரில் வீட்டிற்கு வந்த கும்பல், தனுஷ்கண்டனை கத்தியைக் காட்டி மிரட்டி, 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் ரோஷினியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெண் வீட்டார், அடியாட்களை வைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து காரில் கடத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணை ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பத்திரமாக மீட்டனர். இதையடுத்து கடத்திச் செல்வதற்கு காரணமான அவரது தந்தை குமாரசெல்வம், தாய் சித்ரா, பெரியப்பா லட்சுமணன், அக்கா சௌமியா, குமாரசெல்வத்தின் நண்பர் வெங்கடாஜலம், மந்திரவாதி கருப்பண்ணன் ஆகிய ஆறு பேரை எடப்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.