செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக புகையிலை போதைப் பொருட்கள் கடத்துவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓமலூர் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாருடன் இணைந்து அந்த வழியாக வந்த கடத்தல் காரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது காருக்குள் 500 கிலோ புகையிலை போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த திருச்செங்கோடு கருவேப்பம்பட்டியைச் சேர்ந்த நவீத் என்ற இளஞைர் பொங்கல் பண்டிகையின் போது கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், 5 லட்சம் மதிப்புள்ள புகையிலை போதைப் பொருட்கள் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.