தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நாளை (மார்.14) தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரியில் நடந்த நிலையில், நாளை சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு, பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.
மேலும், தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் விளம்பரத்தில் இந்தியா ரூபாயின் குறியீடுக்கு (₹) பதிலாக ‘ரூ’ இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த விளம்பரத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட…” எனத் தெரிவித்துள்ளார்.
"ரூ" என்ற இலச்சினை புதிதாக பயன்படுத்துவது விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “ திமுக அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில், ஒரு தமிழரால் வடிவமைக்கப்பட்டு, இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நமது ரூபாயில் இணைக்கப்பட்ட ரூபாயின் சின்னத்தினை மாற்றியுள்ளது. இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் மகன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், புதிய தலைமுறைக்கு பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசையும் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் சரவணன், “அண்ணாமலை ஏதோ மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தலைவர் பொறுப்பில் இருக்கக்கூடியவர் இப்படியெல்லாம் பேசவேண்டுமென்ற அழுத்தத்திற்கு ஆட்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.