ஓ பி ரவீந்திரநாத்
ஓ பி ரவீந்திரநாத் கோப்புப் படம்
தமிழ்நாடு

“ஓட்டு போட முடியாது; ஒரு பார்வையாளர் போல்...”- OPR விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம்

சங்கீதா

தேனி மக்களவை தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்திருந்தது. எனினும், அவர் மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஓ.பி. ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.

AIADMK

எனினும் அதுவரை அவையின் நடவடிக்கையில் அவர் பங்குகொள்ளலாமா என்பது கேள்விகுறிதான். இதுகுறித்து புதிய தலைமுறை தரப்பில் ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியின்போது ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகத்திடம் கேட்கப்பட்டது. அவர் நமக்கு அளித்த பதில், இங்கே:

“விஷயம் என்னவெனில் இவரால் இனி ஓட்டுப்போடவோ, மசோதாவுக்கு ஆதரவாக பேசவோ, அதற்கு வாக்களிக்கவோ முடியாது. ஓட்டுப்போட முடியாததால் அவர் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பளிப்பாரா என்பதும் மிகப்பெரிய கேள்வி. மற்றபடி நாடாளுமன்றத்தில் அவரது இருக்கையில் அமரலாம்.

பார்வையாளருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை என்பதுதான் எனது கருத்து. ஏனெனில் அவர் (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்) உள்ளே உட்கார்ந்து இருப்பார். பார்வையாளர்கள் அவர்களுக்குரிய இடத்தில் உட்காருவார்கள்” என்றார்.

ஓ.பி.ஆர் தரப்பு மேல்முறையீடுக்கு செல்லும்போது அவர் வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று எழுப்பட்ட கேள்விக்கு, “என்னுடைய அனுபவத்தில் இதுபோன்ற தீர்ப்பு வந்தமாதிரி தெரியவில்லை. அந்தளவுக்கு ஒரு வலுவான வழக்காக அவருக்கு எதிராக வந்துள்ளது. பிரமாணப் பத்திரத்தில் (affidavit) தவறு பண்ணியிருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படலாம். பல பேரும் தனது சொத்து மதிப்பை மறைத்திடுகிறார்கள், தவறாக சொல்கிறார்கள்” என்று ஓய்வுபெற்ற நீதிபதி டி.என். வள்ளிநாயகம் தெரிவித்துள்ளார்.