மத்திய அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்களை கண்காணித்து, அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கும் வேலையை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் செய்துவருகிறது. இவ்வாணையம் மத்திய அரசின் அனைத்து துறை செயலர்கள், பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை, கடந்த மே 23 ல் அனுப்பியுள்ளது.
பொதுத்துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊழல் வழக்குகளில், முறைகேடுகள் எவை என்பதை வரையறுக்கும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்தான் அது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
” வங்கிகளில் போலி கணக்கு, வங்கி சொத்து, பணத்தை முறைகேடாக பயன்படுத்துதல், வங்கி ஆவணங்களை மோசடி செய்தல் போன்றவை முறைகேடுகளின் கீழ் வரும்.
வங்கி நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்காவிட்டாலும், வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தினாலும், அவை முறைகேடுகளே.
வங்கிகளின் ரகசியம் தொடர்பான விவகாரம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் வரம்புக்குள் வராவிட்டாலும், வங்கியின் ரகசியத்தை ஊழியர்கள் வெளியிடுவது, ஊழல் கண்காணிப்பில் வரும்.
அதிகாரத்தை பயன்படுத்தி சட்டப்பூர்வ சம்பளத்தை தவிர வேறு பணத்தை பெறுவது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வைத்திருப்து போன்றவை ஊழல் தான்.
பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களை பொறுத்தவரை, அதிகபட்ச தொகையை உரிமை கோருதல், காப்பீடு வழங்குவதற்காக ஆபத்தை ஏற்பது போன்றவையும் ஊழல் கண்காணிப்பில் வரும்.
மருத்துவக் காப்பீட்டில் டாக்டர்கள், மருத்துவமனைகள், ஏஜென்டுகள், வழக்கறிஞர்கள் ஆகியோருடன் சேர்ந்து மருத்துவ பரிசோதனையில் கூட்டுச்சதி செய்வது, காப்பீடு நிறுவன ஊழியர்களால் திட்டமிட்டே, தவறான காப்பீடு நடைமுறைகளை கையாளுவதும் முறைகேடு கண்காணிப்பில் வரும். அதிகாரிகளும் இதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.” என்று தெரிவித்துள்ளது.