செய்தியாளர்: சுரேஷ்குமார்
தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்து முஸ்லீம் பிரச்னைகளை திமுக அரசு தான் ஏற்படுத்தி உள்ளது:
இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம் திருப்பரங்குன்ற மலை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியனர். அதற்கு பதிலளித்த அவர்...
இந்தப் பிரச்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர்கள் என அனைவரும் தலையிட்டு சுமுகமான தீர்வை கொண்டு வந்திருக்க வேண்டும் அவ்வாறு செய்யாததால் சகோதரர் நோக்கத்துடன் பழகும் இந்து முஸ்லீம்களிடம் பிரச்னைகளை திமுக அரசு தான் ஏற்படுத்தி உள்ளது.
ஆர்பி.உதயகுமார் எப்பொழுதுமே காமெடி செய்து கொண்டே இருப்பார்:
அதிமுகவினர் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர் அதற்கு தேர்தல் ஆணையம் சின்னம் பற்றிய விசாரணையில் தலையிடலாம் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது எங்களின் வெற்றிக்கு முதல் தொடக்கம் என்றவரிடம், புரட்சித்தலைவி, அம்மா புரட்சி தலைவர் எம்ஜிஆர் போன்று எடப்பாடி செயல்படுகிறார் என்று ஆர்பி.உதயகுமார் கூறியதற்கு பதிலளித்த அவர், ஆர்பி.உதயகுமார் எப்பொழுதுமே காமெடி செய்து கொண்டே இருப்பார். இந்த உலகத்தில் அம்மா மற்றும் எம்ஜிஆர் அவர்களுக்கு நிகராக யாருமே கிடையாது.
அத்திக்கடவு - அவிநாசி விசயத்தில் செங்கோட்டையன் முடிவு சரியானது:
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு வித்திட்டவர் புரட்சித்தலைவி அம்மா. இந்த விஷயத்தில் செங்கோட்டையன் எடுத்திருக்கும் முடிவு அம்மாவின் விசுவாசிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயமாகும். தந்தை பெரியாரை பற்றி பேசுவதற்கு எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அருகதை கிடையாது தங்களுடைய சுய விளம்பரத்திற்காக ஒரு சிலர் அவரைப் பற்றி அவதூறுகளாக பேசி வருகிறார்கள்”
என்று டிடிவி.தினகரன் கூறினார்.