செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் ஒரு நாட்டிகள் தூரத்தில் நடுக்கடலில் பைபர் படகில் இலங்கை மீனவர்கள் இருவர் தத்தளிப்பதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், இருவரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கடந்த 15ஆம் தேதி யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றதாகவும், எஞ்சின் பழுது காரணமாக கடலில் தத்தளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஞானராஜ் மற்றும் பூலோக தாசன் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கடற்பகுதியில் படகுடன் தத்தளித்த மீனவர்களை மீட்ட படகில் மறைத்து வைத்திருந்த மூட்டையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததால் அவர்கள் இருவருக்கும் கஞ்சா பொட்டலங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.