ராமேஸ்வரம் படகுகள்
ராமேஸ்வரம் படகுகள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தொடர் அச்சத்தால் கடலுக்கு செல்லாத மீனவர்கள்... ராமேஸ்வரத்தில் தற்போதைய நிலை என்ன?

PT WEB

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 15ஆம் தேதி முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

இதுதொடர்பாக கடந்த 21ஆம் தேதி மீனவர்கள் தங்களது அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க 14 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள இருந்தனர். இருப்பினும் மாவட்ட ஆட்சியர் அதனை தடுத்து நிறுத்தி கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதனையடுத்து கடந்த சனிக்கிழமை காலை தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இதையடுத்து நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இலங்கையிலுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதலமைச்சரை மீனவர்கள் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார். இதனையடுத்து தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் அறிவித்தனர்.

தொடர்ந்து இன்றுமுதல் மீன்பிடிக்கச் செல்வதாக அவர்கள் அறிவித்திருந்த நிலையில், இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையால் அச்சத்திலேயே அவர்கள் உள்ளனர் என கூறப்படுகிறது. இதனால் மீன்பிடி தொழிலாளர்கள் பலரும் இன்று தொழிலுக்கு செல்லவில்லை. இதையடுத்து மீன்பிடி தொழில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக படகு உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் சுமார் 750 க்கும் மேற்பட்ட படகுகள் உள்ள நிலையில், இன்று காலை 10:30 மணி வரை 30க்கும் குறைவான விசைப்படகுகளே கடலுக்கு மீன் பிடிக்க சென்றது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு மீனவர்களின் அச்சத்தை போக்கி பாரம்பரியமான கடல் பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்று தரவும் இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தி தரவும் கோரிக்கை விடுத்துள்ளனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.