செய்தியாளர்: அ.ஆனந்தன்
தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே ஆரம்பித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகம் 35 முதல் 45 கிமீ வரையிலும், அதிகபட்சமாக 55 கிமீ வரையிலும் வீச கூடும். இதனால் கடல் அலை 3.0 முதல் 3.5 மீட்டர் உயரத்தில் எழக்கூடும்.
இந்நிலையில், இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம். அதேபோல் படகு மற்றும் வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறு மண்டபம் மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மீன்பிடித் தடை அறிவிப்பால், சுமார் 600க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8,000-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்களும், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலையிழந்துள்ளனர். விசைப் படகுகளை போல நாட்டுப்படகு மீனவர்களுக்கும் மீன்பிடிக்க செல்லாத தடை காலத்தில் நிவாரண உதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.