செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை சூடை வலைக்குச்சி மீனவ கிராமம் அருகே நடுக்கடலில் சுங்கத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் பதிவு எண் இல்லாத நாட்டுப்படகு சென்றுள்ளது. அதை மடக்கிப் பிடிக்க முயன்ற போது படகில் இருந்த மர்ம நபர் கடலில் குதித்து தப்பினர்.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நாட்டுப்படகை சோதனை செய்தபோது, படகில் ஐந்து மூட்டைகளில் 80 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நாட்டுப்படகுடன் கஞ்சாவை பறிமுதல் செய்த மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகள் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா முதல் தரமானது எனவும் சுமார் ரூ.16 லட்சம் மதிப்புடையது என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.