ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் திமுக மிரட்டியது என ஆதவ் அர்ஜூனா கூறியதற்கு, ரஜினி பதிலடி கொடுத்துள்ளார். அவர், அவதூறு கருத்துக்களை கண்டித்த அரசியல் தலைவர்களுக்கும், திரையுலகினருக்கும் நன்றி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு பிரபலமான தலைவராக ரஜினி அரசியலுக்கு வர நினைத்தார். திமுக குடும்பம் அவருக்கு மிரட்டல் விடுத்து அரசியலுக்கு வராமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், திமுகவை எதிர்ப்பதற்கு நம் தலைவருக்கு மனவலிமை இருக்கிறது என சமீபத்தில் தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் விவாதப் பொருளாகியது. இதைத் தொடர்ந்து ஆதவ்-க்கு கருத்துக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி, அரசியலுக்கு வருவது எப்படி தனிநபர் உரிமையோ, அதுபோல, அரசியலுக்கு வராமல் இருப்பதும் தனிப்பட்ட உரிமை. அவதூறு கருத்துக்களைப் பேசுவது அநாகாரீக அரசியல் என விமர்சித்திருந்தார்.
அதேசமயம், ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மதுரை ரஜினி ரசிகர்கள் ”காலம் பேசாது; நிச்சயம் பதில் சொல்லும் என்ற வாசகங்களுடன்” ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனாவை விஜய் கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் ஆதவ் நிற்கும் தொகுதியில் ரஜினி அனுமதியுடன் சாதாரண தொண்டனை நிறுத்தி தோற்க்கடிப்போம் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்த சூழலில் தான், ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவருடைய அவதூறு கருத்தைக் கண்டித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். "காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு குறித்து தவெக தலைவர் விஜய் இன்னும் கருத்து தெரிவிக்காத நிலையில், இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்து வருகிறது.