மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூர் கிராமத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற திண்ணை பரப்புரை நடைபெற்றது. இந்நிகழ்வில் மதுரை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா கலந்துகொண்டார். நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் எவ்வித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய விரும்புவதாக ஓபிஎஸ் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய ராஜன் செல்லப்பா, “அதிமுகவிற்கு வலிமையான எதிர்காலம் 2026ஆம் ஆண்டு உள்ளது. அதிமுக இரட்டை தலைமையாக இருந்த போதும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. தற்போது ஒற்றை தலைமையில் புதிய உச்சத்தை தொட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறக் கூடிய வகையில் தங்களுடைய பயணங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அவருடைய செல்வாக்கு நன்றாக இருந்திருக்குமானால் பாஜகவே அவரைக் கட்சியில் இணைத்திருக்கும். தற்போது செல்வாக்கை இழந்துள்ள ஓபிஎஸ் ஆறு மாத காலம் அதிமுகவிற்கு எந்தவித இடையூறும் செய்யாமல் அமைதியாக இருந்தால் அவரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து தாங்கள் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் பேசி நடவடிக்கை எடுப்போம். வழக்கு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளை ஓபிஎஸ் போன்றோர் தொடர்ந்து அதிமுகவுக்கு இழைத்து வருகின்றனர். அதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவது கட்சியின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. மூத்த உறுப்பினர்கள் இதுபோன்று செயல்படுவது அழகல்ல.
மூத்த அமைச்சர் செங்கோட்டையன், ஏற்ற இறக்கங்கள் நன்றாக புரிந்து கொண்டவர். அதிமுகவிற்கு சிறு இழுக்கு வந்தால் கூட பொறுக்க மாட்டார். மிகச்சிறப்பாக பணியாற்றியவர். அதிமுகவிற்கு வெற்றியை தேடி தருவதில் அங்கமாக இருப்பார். அவர் மரியாதை காரணமாக பொது செயலாளர் என மேடையில் வார்த்தையை பயன்படுத்தி இருகிக்கிறார். இது தவறு அல்ல” என பேசினார்.