அமைச்சர் ராஜகண்ணப்பன் Pt web
தமிழ்நாடு

அமைச்சர் ராஜகண்ணப்பனின் தொடர் அதிர்வேட்டுகள்.. தேமுதிக, காங்கிரஸ் குறித்து கூறியது என்ன?

சமீபகாலமாக அடுத்தடுத்து அதிரடியாக பேசிவரும் ராஜகண்ணப்பன், தமது அதிரடி பேச்சுகளை தொடர்ந்து வருகிறார். காங்கிரஸ், தேமுதிக குறித்து அவர் பேசியதை தொகுப்பாக காணலாம்.

PT WEB

அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுக கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் தேமுதிக குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்கள் குறைவாக உள்ளனர் எனவும், தேமுதிக இரு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்துவது நியாயமல்ல எனவும் அவர் கூறினார்.

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், வழக்கமான தனது பாணியில் 'அதிர்வேட்டுகளை' பறக்கவிட்டு அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளார் அமைச்சர் ராஜகண்ணப்பன். ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் நிர்வாகிகள் முழங்கிவரும் நிலையில், பூத் கமிட்டிக்குகூட ஆள் இல்லாத கட்சி என்றும், காங்கிரஸில் ஒருவர், இருவர் இருந்துகொண்டு உயிரை வாங்குவதாகவும் திமுக எம்எல்ஏ கோ.தளபதியும், அமைச்சர் ராஜகண்ணப்பனும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே எழுந்த புகைச்சல் இன்னும் அடங்காத நிலையில், தூபம் போட்டுள்ளார் ராஜகண்ணப்பன்.

காங்கிரஸ் குறித்த விமர்சனங்கள் இப்படி ஒருபுறம் இருக்க, தேமுதிக குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் கூறிய பதில், வேறு ரகம்.

அமைச்சர் ராஜகண்ணப்பன்

தேமுதிக குறித்து!

தற்போது நிலவும் சூழல்படி, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே தேமுதிக-வுக்கு ஒற்றை இலக்க இடங்களை, அதாவது 6 முதல் 9 இடங்களை ஒதுக்க தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தேமுதிக தரப்போ இரட்டை இலக்கத் தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா எம்.பி பதவியையும் கேட்பதாக கூறப்படுகிறது. தேமுதிகவை கூட்டணிக்கு கொண்டுவர பாஜக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது என அண்மையில் திண்டுக்கல் சீனிவாசன் உண்மையை போட்டுடைத்த நிலையில், ராஜகண்ணப்பனும் தேமுதிக குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தேமுதிக, இரு கட்சியினரிடமும் பேச்சுவார்த்தை நடத்துவது நியாயமல்ல என்றும், விசுவாசமாக இருந்தால் ஒரு பக்கம் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜகண்ணப்பன் விமர்சனத்துக்கு பிரேமலதா பதில்!

இந்தநிலையில், தேமுதிக எப்படிப்பட்ட கட்சி என்பதை, தமிழக மக்கள் அறிவார்கள் என, அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தற்போதைய அரசியல் சூழலில் தேமுதிக வலுவாக இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரேமலதா, இந்த கருத்தைக் கூறியவர் எப்படிப்பட்டவர் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும், ஆனால் தேமுதிகவினர் அனைவரையும் மரியாதையாகத்தான் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, அமைச்சர் ராஜகண்ணப்பன் சமீபகாலமாக அடுத்தடுத்து அதிரடியாக பேசிவருகிறார்.