கே. பழனிசாமி - ஜெகன் மூர்த்தி Pt web
தமிழ்நாடு

"அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது புரட்சி பாரதம்" - பூவை. ஜெகன்மூர்த்தி

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது புரட்சி பாரதம் கட்சி. அதிமுக உடனான கூட்டணி சட்டமன்றத் தேர்தலுடன் முடிந்துவிட்டது எனவும் நாங்கள் தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை எனவும் அக்கட்சியின் தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தி பேட்டி.

Premkumar S

2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே புரட்சி பாரதம் கட்சி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வரும் நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 4 இடங்களை கேட்டார் அக்கட்சியின் தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தி. எனினும், கே. வி. குப்பம் தொகுதி மட்டுமே அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அத்தொகுதியில் போட்டியிட்ட ஜெகன்மூர்த்தி தவெக வேட்பாளர் தென்றல் குமாரிடம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அதேபோல, அவர் இடம்பெற்றிருந்த அதிமுக கூட்டணியும் இத்தேர்தலில் படுதோல்வி அடைந்து மூன்றாவது இடத்திற்கு சென்றிருக்கிறது.

பூவை. ஜெகன்மூர்த்தி

இந்தசூழலில் தான், தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகள் மற்றும் 2026-27ஆம் ஆண்டுக்கான ஆதி திராவிடர், பழங்குடியினருக்கான அக்கட்சியின் “நிழல் நிதி அறிக்கை” - ஐ தியாகராய நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தலுக்கு பிறகு நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. தேர்தல் முடிந்தவுடன் கூட்டணியும் முடிந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே, ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கும் நிலையில், இன்று புரட்சி பாரதம் கட்சியும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருக்கிறது.