டாஸ்மாக் முறைகேடு| முதல் குற்றவாளி செந்தில் பாலாஜி.. 7 பேர் மீது FIR பதிவு!
டாஸ்மாக் டெண்டர் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன், மூத்த மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர் செல்வம், பாஸ்கர், ரதேஷ் ராஜ், கார்த்திக் ஆகியோர் குற்றப்பத்திரிகையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
செய்தியாளர் - M. மீரா
திமுக ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக இருந்த போது, செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் தொடர்பாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அமைச்சர் பதவியில் இல்லாத காலத்திலும், டாஸ்மாக் ஒப்பந்தங்களில் அவரது செல்வாக்கு நீடித்ததாக குற்றச்சாட்டுகள் இருந்தது.
இந்நிலையில், டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நெருங்கிய ஆதரவாளர்களுக்கு தொடர்புடைய 41 இடங்களில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சூழலில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் மற்றும் மதுபான ஆலைகளிடம் "பார்ட்டி பண்ட்" என்ற பெயரில் பணம் வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது தனியாக முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது குற்றவாளியாக டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ். விசாகன் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேலும், டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர்கள் டி. ராமதுரை முருகன் மற்றும் ஆர். பன்னீர் செல்வம் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செந்தில் பாலாஜியின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளர் பாஸ்கர், அவரது நெருங்கிய கூட்டாளி ரதேஷ் ராஜ் மற்றும் மூலனூரைச் சேர்ந்த எஸ். கார்த்திக் ஆகியோரின் பெயர்களும் எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ளன.
இதுமட்டுமல்லாமல், இந்த வழக்கில் மதுபான ஆலைகள், பீர் தயாரிப்பு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தின் அடையாளம் தெரியாத சில அரசு ஊழியர்கள் மற்றும் தொடர்புடைய பிற நபர்களும் குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் டெண்டர் நடைமுறைகளில் முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத நிதி பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் மீதும் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 8 அன்று நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
இதற்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள செந்தில் பாலாஜி, நிபந்தனை ஜாமீனில் தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

