பஞ்சாப் தம்பதி
பஞ்சாப் தம்பதி புதியதலைமுறை
தமிழ்நாடு

ரூ.69,400-ஐ பறிமுதல் செய்த பறக்கும் படை; கண்ணீர்விட்ட பஞ்சாப் தம்பதி! ஆய்வுக்குபின் பணம் ஒப்படைப்பு

யுவபுருஷ்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை டபுள் ரோடு பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் இருந்தபொழுது, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழந்தைகளுடன் விமான நிலையத்திலிருந்து வாடகை கார் ஒன்றில் வந்தனர். அப்போது, அந்த காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ததில், அவர்களிடம் இருந்து ரூபாய் 69,400 பணம் இருந்த நிலையில், அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அப்போது, “நாங்கள் பஞ்சாப் மாநிலத்திலிருந்து விமானம் மூலம் கோவை வந்து, கோவையில் இருந்து வாடகை காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தோம். எங்களுக்கு எதுவும்தெரியாது, கையில் செலவிற்கு பணமில்லை. எங்களது பணத்தை திரும்ப கொடுத்துவிடுங்கள்” என்று தம்பதியினரில் மனைவி கதறி அழுதார். இதில், தேர்தல் பறக்கும் படையில் உள்ள குழுவினருக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் சரியாக தெரியவில்லை என்பதும், சுற்றுலா வந்தவர்களுக்கு ஆங்கிலம் ஹிந்தியே தவிர தமிழ் தெரியாது என்ற நிலையில் பணத்தை திரும்ப பெற பஞ்சாப்பை சேர்ந்த அந்த பெண்மணி கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களை சங்கடமடைய வைத்தது.

தேர்தல் பறக்கும் படையினர் கட்சியினர் கொண்டு வரும் பணத்தை பிடிக்காமல் சிறு குறு வியாபாரிகளின் பணமும் இன்ப சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்தும் பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர், எனவே மாவட்ட தேர்தல் அதிகாரி தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் உள் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் மருத்துவ செலவிற்காக எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்யும் போது அது வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்து செல்லபடுகிறதா என்பதை உறுதி செய்தப்பின் பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையே, கூடுதல் ஆட்சியர் தலைமையிலான குழு பஞ்சாப் தம்பதி கொண்டுவந்த பணத்திற்கான ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, ஆய்வுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த சுற்றுலா பயணிகளிடம், அவர்களின் தொகையான ரூ.69,400 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் திரு சதீஷ் அவர்களின் மூலம் ஒப்படைக்கப்பட்டது.