செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோட்டில் நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் பேசுகையில்... பொருளாதார ரீதியில் நாட்டு மாடுகளை தவிர்த்து வரும் நிலையில், நாட்டு மாட்டு பாலில் உள்ள நுண்ணியிர்கள் வேறு எந்த பாலிலும் இல்லை. பாலை மருந்தாக எண்ணி அனைவரும் ஒவ்வொரு வீட்டிலும் நாட்டு மாட்டை வளர்க்க வேண்டும்.
நடிகர் விஜம் தனது வருமானத்தை விட்டு பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். வாக்கு என்பது தமிழ்நாடு அரசியலில் முக்கியம். யார் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்தாலும் மனதார வரவேற்கிறோம். மக்கள் நலனுக்காக அனைவரும் அரசியல் களத்திற்கு வருவது நல்லது. பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீர்கேடு மாதிரி தெரியவில்லை. வெளியில் இருக்கும்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எண்ணங்கள் வேறுமாதிரி இருந்தது. ஒரு போட்டியாளராக சென்று வந்துள்ளேன். நன்றாக உள்ளது.
ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வது வருத்தமாக உள்ளது. அனைத்து பெற்றோர்களும் பள்ளியில் மாற்று பெற்றோர்களாக இருக்கும் ஆசியர்களை நம்பி விடும்போது அவர்களே கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். துபாய் போன்ற வெளிநாடுகளில் இருப்பது போன்று கடுமையான தண்டணைகள் இருந்தால் மட்டுமே இதுபோல் நடக்காது. தமிழ்நாடு இயங்குவது பெண்களால் தான். நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என பெண்கள் வேலை செய்து வருகின்றனர்.
பேருந்துகள், ரயில்களில் பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் ஒழிய தண்டனைகள் கொடூரமாக இருக்க வேண்டும். குற்றவாளிக்கு வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயம் இருக்கும் அளவிற்கு தண்டனை இருந்தால் தான் பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் என்று நடிகர் ரஞ்சித் தெரிவித்தார்.