காவல் நிலையம்
காவல் நிலையம் WebTeam
தமிழ்நாடு

”எங்க அண்ணனை காரில் கடத்திட்டு போயிட்டாங்க..” - 8ம் வகுப்பு மாணவர் நடத்திய நாடகம்; போலீசார் வேதனை!

PT WEB

காரைக்காலைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் ஒருவர் தன்னை மர்மநபர்கள் சிலர் கடத்திவிட்டதாக நடகமாடியதாகவும் அதற்காக அவர் சொன்ன காரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் சகோதரர்கள் இருவர் படித்து வருகின்றனர். அதில் ஒருவர் எட்டாம் வகுப்பும், மற்றொருவர்ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

மாணவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில், பள்ளிக்கு செல்லும் வழியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சென்றபோது, தனது அண்ணனை மர்மநபர்கள் சிலர் காரில் கடத்தி சென்று விட்டார்கள் என்று இளைய மாணவர் பள்ளிக்கு சென்று தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். புகாரின் பேரில் மாவட்ட முதுநிலை கண்காணிப்பாளர் மணிஷ் தலைமையான போலீசார் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கடத்தப்பட்டதாக கூறப்படும் மாணவரின் தம்பியை விசாரித்த போது தான் அண்ணனை மூன்று பேர் கருப்பு கலர் ஆம்னி காரில் முகமூடி அணிந்து தூக்கி சென்று உள்ளார் கூறியுள்ளார்.

பின்பு மாவட்டத்தில் உள்ள ஏழு எல்லைகளுக்கும் சீல் வைக்கப்பட்டு அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களின் வரவழைக்கப்பட்டுன போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்தில் போலீஸர் தேடுதல் பணியில் இருந்த போது கற்களாச்சேரி ஆத்துப்பாலம் அருகே மாணவர்நின்று கொண்டிருந்ததை பார்த்து போலீசார் மீட்டனர்.

மாணவரிடம் போலீசார் விசாரணை ஈடுபட்ட போது மர்ம நபர்கள் மூன்று பேர் என்னை காரில் தூக்கி சென்று பின்பு ஒரு சாக்கடை கால்வாய் அருகே என்னை தள்ளிவிட்டு சென்றுவிட்டனர் என்று கூறினான் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு மாணவனை அழைத்துச் சென்று நடந்தது குறித்து விசாரித்தனர்.

அப்போது அங்கு நடந்ததை கூறிய போது போலீசாருக்கு மாணவர் மீது சந்தேகம் எழுந்தது. மேலும் அப்பகுதியில் சிசிடிவி காட்சிகள் ஆராய்ந்த போது மாணவன் கடத்தப்படவில்லை என்று உறுதி செய்தனர்.

மேலும் மாணவரையும் அவனது சகோதரரரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, நேற்று பள்ளியில் ஹோம் ஒர்க் எழுதவில்லை என்பதால் இன்று பெற்றோரை அழைத்து வர சொன்னதால் மாணவர் கடத்தல் நாடகம் நடத்தியது வெளிச்சத்திற்கு வந்தது.

ஒரு மணி நேரம் அலறவிட்ட சிறுவனைக் கண்டு போலீசார் நொந்து கொண்டனர்.