உச்ச நீதிமன்றம் முகநூல்
தமிழ்நாடு

ஜனாதிபதி திரௌபதி முர்முவின் 14 கேள்விகள்.. கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்க முடியும் என்பது உள்ளிட்ட 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்வைத்திருக்கிறார்.

PT WEB, ஜெனிட்டா ரோஸ்லின்

இ. இந்து

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது பெரும் பேசுபொருளாக மாறியது. இந்தநிலையில், ஆளுநருக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், 2 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 142-ல் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் உச்சபட்ச சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி கிடப்பில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.

மேலும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் காலக் கெடுவை நிர்ணயித்தது. இந்த தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே , உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜகதீப் தன்கர் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். எப்படி உச்சநீதிமன்றம் கால வரம்பை நிர்ணயிக்க முடியும், எதற்கு நாடாளுமன்றம் இருக்கிறது என்று காட்டமான கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.

ஆனால், குடியரசுதலைவர் திரௌபதி முர்மு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தை பல கேள்விகளை முன்வைத்துள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

அதில், மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு கால வரம்பு நிர்ணயிக்கும் நிபந்தனைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாதபோது, உச்ச நீதிமன்றம் எப்படி கால நிர்ணயி

இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்க முடியும் என்பது உள்ளிட்ட 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்வைத்திருக்கிறார்.

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்:

1.ஒரு மசோதா ஆளுநர் முன் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு இருக்கும் அனைத்து அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும்போது, அமைச்சரவையால் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?

2.பிரிவு 200ன் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?

3. பிரிவு 200ன் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமை நியாயப்படுத்தக்கூடியதா?

4. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் ஆளுநரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், சட்டப்பிரிவு 200ன் கீழ் உள்ள அதிகாரங்களை ஆளுநர் பயன்படுத்துவதற்காக, நீதித்துறை உத்தரவுகள் மூலம் காலக்கெடு விதிக்கப்பட்டு, செயல்படுத்தும் முறையை பரிந்துரைக்க முடியுமா?

5. பிரிவு 200ன் கீழ் ஒரு ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்விற்கு, பிரிவு 361 ஒரு தடையாக இருக்குமா?

6. பிரிவு 201ன் கீழ் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயப்படுத்தப்படுகிறதா?

7. அரசியலமைப்பு ரீதீயாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத்தலைவரின் அதிகாரனஙகளைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், பிரிவு 201ன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா? செயல்படுத்தும் முறை பரிந்துரைக்கப்படுமா?

8. ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?

9. ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கும்போது, பிரிவு 143ன் கீழ் உச்சநீதிமன்றத்தின் கருத்தைப் பெற்றுக்கொள்ளவும் குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா?

10. மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?

11.பிரிவு 131ன் கீழ் வழக்குத் தொடர்வதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடைச் செய்கிறதா?

12. பிரிவு 145(3)ன் படி, எந்தவொரு உச்சநீதிமன்ற அமர்வும், அரசியலமைப்பின் விள்க்கம் குறித்த கணிசமான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு அதை அனுப்புவது கட்டாயமில்லையா?

13. முரணான உத்தரவுகளை பிறப்பித்தல் அல்லது ஆணைகளை பிறப்பித்தல் வரை பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா?

14. அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின் அல்லது ஆளுநரின் உத்தரவுகளையும் பிரிவு 142ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?

இத்தகைய கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் இந்த பதிவிற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், “மத்திய அரசின் குடியரசுத் தலைவர் குறிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்; ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்த அரசமைப்பு நிலைப்பாட்டை தகர்க்கும் முயற்சி.

பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா?. அரசமைப்பை பாதுகாக்க சட்ட போராட்டத்தில் இணைய வேண்டும்; அரசமைப்பை காக்கும் போராட்டத்தில் பாஜக அல்லாத மாநிலங்கள், கட்சித் தலைவர்கள் இணையுங்கள் . இந்த போரில் நமது முழு பலத்துடன் போராடுவோம்; தமிழ்நாடு போராடும். குடியரசுத் தலைவரின் குறிப்பில் உள்ள கேள்விகள், அரசமைப்பின் அதிகாரப் பகிர்வை சிதைக்கும்; எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும் . பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது; இது மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.