தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில், முதன்முறையாக நடிகர் விஜயகாந்தால் ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. ஏற்கெனவே, அக்கட்சிக்கு 1 மாநிலங்களவை சீட்டை திமுக ஒதுக்கியிருக்கிறது திமுக. எனினும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பங்கீடு இன்னும் முடியவில்லை. முன்னதாக, திமுக கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கும் சூழலில், தேமுதிக இணைவு, திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டை கடினமாக்கியிருக்கிறது. குறிப்பாக, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து கூட்டணியில் இருந்து வரும் மதிமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிக இடங்கள் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, விசிக மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்குவதிலும் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த சூழலில்தான், இரு தினங்களுக்கு முன்பு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது இரு மகன்களுடன் டிபண்டர் காருடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இணைந்ததாலேயே பிரேமலதா விஜயகாந்த் கார் வாங்கியிருப்பதாகவும், 1 சதவீத வாக்குச் சதவீதமே இருக்கும் கட்சிக்கு எதற்கு திமுக மாநிலங்களவை சீட்டு கொடுத்திருக்கிறது எனவும் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில்தான், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பிரேமலதா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரிடம் சமூக வலைதளங்களில் பரவும் கார் புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், ”நாங்கள் அந்த கார் வாங்கி 1.5 வருடத்திற்கு மேல் ஆகிறது. அந்த வண்டியை திருப்பதிக்கு கொண்டுசென்றால், தற்போதுதான் வாங்கியிருக்கிறோம் என விமர்சிக்கிறார்கள். ஒரு வண்டி வாங்குற தகுதிகூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா? கொடுத்துக் கொடுத்து சிவந்த கரத்துக்குச் சொந்தக்காரர் கேப்டன்.
தான் சம்பாதித்ததில் 90% மக்களுக்காக உதவி செய்தவர். அவர் செய்கிற ஒவ்வோர் உதவிக்கும் பின்னால் இருந்தவர் நான். குறை சொல்கிற வாய், குறை கூறிக்கொண்டுதான் இருக்கும். குரைக்கிற நாய் குரைத்துக்கொண்டேதான் இருக்கும். அவர்களுகெல்லாம் பதில் சொல்லுகிற வேலை தங்களுக்கு கிடையாது. அதேபோல, தேமுதிகவுக்கு எதுக்கு எம்பி சீட்டு என கேட்டு விவாதம் செய்கிறார்கள். 0.5 சதவீத வாக்கு வங்கியே இருக்கிறது என விமர்சிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது எங்கள் கட்சி குறித்து ஏன் பேசுகிறீர்கள்? எங்களை விட்டுவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.