பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

”அண்ணன் எடப்பாடி பழனிசாமி பற்றி நான் அப்படி பேசவில்லை” - பிரேமலதா விஜயகாந்த்

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என பிரேமலதா கூறியதாக செய்திகள் வெளியான நிலையில், ”அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டதாக தான் பேசவே இல்லை” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

PT WEB

"எடப்பாடி பழனிசாமியை பற்றி தவறாகப் பேசவில்லை. அவர் எங்களை முதுகில் குத்திவிட்டதாக நான் பேசியதாக செய்திகள் தவறாகப் பரப்பப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என நான் சொன்னதாக தவறான செய்தியை பரப்பிய ஊடகங்களை கண்டிக்கிறேன்" என மேல்மருவத்தூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக பேசியுள்ளார்.

மேல்மருவத்தூரில் நடந்த பிரேமலதா செய்தியாளர் சந்திப்பு

சில நாட்களுக்கு முன்பு, "மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமி தேமுதிகவினர் முதுகில் குத்திவிட்டார்" என சென்னையில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மேல்மருவத்தூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் இதற்கு பதிலளித்துப் பேசியுள்ளார்.

மேல்மருவத்தூரில் தேமுதிக நிர்வாகியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தேமுதிக சார்பில் நடைபெறும் உள்ளம் தேடி இல்லம் நாடி, மக்களை தேடி மக்கள் தலைவர் என்கிற முதல் சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும் மக்களுடைய ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் இரண்டாம் கட்ட பயணம் வருகின்ற ஐந்தாம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள். ஜனவரி 9ல் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பு வரும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் சொல்லாததெல்லாம் நான் சொல்லியதாக செய்திகள் வருகிறது. அது கண்டனத்திற்குரிய விஷயம். எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் நாங்கள் செய்யும் ஆலோசனைகளை எல்லாம் செய்தியாளர்களிடம் சொல்ல முடியுமா? நான் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அப்படி சொல்லவேயில்லை" எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு அரசுதான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இவர்களுடன் தேமுதிக பொருளாளர் சதீஷ் மற்றும் தலைமைக் கழக பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.