electricity board web
தமிழ்நாடு

அடிக்கடி மின்வெட்டு.. கொந்தளித்த மக்கள்! RTEP திட்டத்தால் இனி தடையில்லா மின்சாரமா?

அடிக்கடி மின்வெட்டால் கொந்தளிக்கும் மக்களுக்கு தீர்வாக, மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடைகளை குறைக்க RTEP திட்டத்தை அவசரமாக மின்வாரியம் அமல்படுத்துகிறது.

PT WEB

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்து வந்ததுடன் பல்வேறு இடங்களிலிலும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டுகளுக்கு மின்மாற்றி திருட்டு, மின் கட்டமைப்பு பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் கடந்த ஆட்சிக்காலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் ஆகியவையே இதற்கு காரணம் என அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் ஏற்படும் மின் வெட்டுகளை நிரந்தரமாக தடுக்க 'ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம் (Repeat Tripping Elimination Programme - RTEP) என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

RETB திட்டத்தின் மூலம் தலைமையகத்தில் மாநில அளவிலான நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழு, ஆராய்ச்சி & மேம்பாட்டு (R&D) அணியுடன் இணைந்து மாநிலம் முழுவதும் நிகழும் மின்தடை சம்பவங்களை ஆய்வு செய்து, சிறந்த தொழில்நுட்ப நடைமுறைகளை பரிந்துரைக்கும்.

இதன் மூலம் கடந்த ஆறு மாதங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு Root Cause Analysis எனப்படும் அறிவியல் அடிப்படையிலான காரண ஆய்வு மேற்கொள்ளப்படும்.

electricity

அதன்பின், அந்தப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து மின்மாற்றி கோளாறு, கேபிள் பழுது, பாதுகாப்பு அமைப்பு செயலிழப்பு, அதிக மின் சுமை மற்றும் விலங்குகள் அல்லது பறவைகளால் ஏற்படும் கோளாறுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அவற்றை சரிசெய்வதற்கான தீர்வுகள் செயல்படுத்தப்படும்.

மேலும், 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ள புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின் கட்டமைப்பு பணிகளை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், இதன்மூலம் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடைகள் குறைவதோடு, மின்விநியோக நம்பகத்தன்மை மேம்பட்டு , நுகர்வோருக்கு தரமான மற்றும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்று மின்வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.