பதவி விலகும் மாநில தேர்தல் ஆணையர்? List எடுத்து தூக்கும் தவெக அரசு? பரபரக்கும் அரசியல் களம்!
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பி.ஜோதி நிர்மலாசாமி பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளாட்சித் தேர்தலுக்காக ஆயத்தமாகி வரும் சூழலில் இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.
முந்தைய திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட முக்கிய அதிகாரிகளை தவெக அரசு மாற்ற முயற்சிக்கிறது என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த செய்தியும் தற்போது கவனம் பெற்றுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சிவதாஸ் மீனா, தமிழ்நாடு தீயணைப்பு ஆணைய தலைவர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் மணிவண்ணன் ஆகியோர் பதவி விலகியிருந்தனர். தவெக அரசு கேட்டுக்கொண்டதன் பேரிலேயே இவர்கள் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் தற்போது மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமியும் இணைந்துள்ளார். ஜோதி நிர்மலாசாமி, 2024 மார்ச் மாதத்தில் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்துடன் மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். வழக்கமான வாரியங்கள் மற்றும் அரசு நிறுவனங்களைப் போல அல்லாமல், மாநில தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஜோதி நிர்மலசாமி தலைமையிலான மாநில தேர்தல் ஆணையம், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஒவொரு கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக BHEL நிறுவனத்திடமிருந்து 50,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஒரு வாக்காளர், ஒரே நேரத்தில் நான்கு வாக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அடுத்து வரக்கூடிய தேர்தல்களில் மும்முரமாக பணியில் ஈடுபட்டுவரும் நிலையில், ஜோதி நிர்மலாசாமி பதவி விலகல் குறித்தான செய்தி கவனம் பெற்றுள்ளது.

