கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வின்போது, கூட்டநெரிசலில் சிக்கி 11 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு மாத காலம் அமைதியாக இருந்த தவெக, மீண்டும் சேலத்தில் இம்மாத தொடக்கத்தில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டது. ஆனால், அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, டிசம்பர் 9ம் தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடத்தினார் விஜய். அங்கு என்.ஆர்.காங்கிரஸை விமர்சிக்காமல் கூட்டணியில் இருக்கும் பாஜகவை மட்டும் விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியாக அந்த கட்சியை விமர்சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விஜய் தாமதமாக வந்ததே கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட முக்கிய காரணமாக பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி கூட்டத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்திருந்தார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் நாளை காலை 11.00 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் 'மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக காவல்துறை கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. பரப்புரை நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை ஒரு நாள் மட்டும் நான்கு மணி நேரம் தாமதமாக டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு அருகே உள்ள தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளியில் நாளை நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்படியாக ஏராளமான நிபந்தனைகள் மற்றும் முன்னெச்சரிக்கையுடன் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தவெக தரப்பிலும் தொண்டர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும், விஜயின் வாகனத்தை பின்தொடரக்கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்து மாநில அளவிலான பதவியைப் பெற்றிருக்கிறார். தனக்கான அரசியல் எதிர்காலத்திற்கு வலுசேர்க்கும் வகையில் ஈரோட்டில் இந்த மக்கள் சந்திப்பை நடத்தி வெற்றிபெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அதனால், விஜயின் இந்த மக்கள் சந்திப்பு கூடுதல் கவனம் பெறுகிறது.