கவிஞர் வைரமுத்து இரங்கல்
கவிஞர் வைரமுத்து இரங்கல் முகநூல்
தமிழ்நாடு

"நில் என்று சொல்லி நிறுத்தி எடுத்து கொண்டது காலம்" - விஜயகாந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

ஜெனிட்டா ரோஸ்லின்

தேமுதிக தலைவர் விஜயாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமான நிலையில் தற்போது பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்தவகையில் தற்போது கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

அதில், “ கலைத்துறையில் பெரும் கலைஞரை நான் இழந்திருக்கிறேன். என் பாடல்களை பாடி அழகாக நடித்து கொடுத்த ஒரு நடிகரை இழந்திருக்கிறேன்.என் நீண்டகால நண்பரை நான் பரிகொடுத்துவிட்டேன் என்று நான் வருந்துகிறேன். ”எரிமலை எப்படி பொறுக்கும். நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்.” என்பதை தன் சிவந்த கண்களோடு திரையில் உச்சரித்து காட்டிய கலைஞர் இன்று உறங்கிவிட்டார் என்பது எனக்கு சோகத்திலும் சோகம்.

அவர் திறையில் நல்லவர். அரசியலில் வல்லவர். நடிப்பு, பொதுவாழ்வு, கொடை இவை மூன்றிலும் அவருக்கு பாசாங்கு இல்லை. இவை மூன்றும் நிஜத்திலும் நிஜமாக இருந்தது. அதுவும் மனதில் இருந்து உருவானது. இவரின் பெரிய சிறப்பு பொது வாழ்வில் ஒன்று உண்டு.

அதுதான் அவருக்கான மிகப்பெரிய தனி அடையாளம் என்று நான் கருதுகிறேன். அது என்னவென்றால் கலைஞர், ஜெயலலிதா மறையட்டும் அதன்பிறகு அரசியலை பற்றி யோசித்து கொள்ளலாம் என்று பலர் நினைத்த நிலையில் இவர்கள் உச்சத்தில் இருந்தபோதிலும் அரசியலில் குதித்தவர் இவர். இப்படி எதிர்கட்சி தலைவர் என்ற உயரம் வரை பொது வாழ்வில் உச்சம் தொட்டுவிட்டார்.

’உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவரை நில் என்று சொல்லி நிறுத்தி எடுத்து கொண்டது காலம்’ வருந்துகிறேன்.... ஒரு நண்பரை இழந்ததற்காக, ஒரு கதாநாயகரை இழந்ததற்காக , பொது வாழ்வில் ஒரு நேசமுள்ள மனிதரை இழந்ததற்காக, ஒரு மதுரைக்காரனை இழந்ததற்காக நான் வருந்துகிறேன்.கண்ணீர் விடுகிறது இவரது எனவே இவரின் குடும்பத்திற்கும் கதறி அழுகிறது கட்சி எனவே கட்சி காரர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.