மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனான அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாக, பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. கட்சிகள் கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடுகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இன்னொரு புறம் பெரிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை அறிவித்து பிரசாரத்தைத் தொடங்கி வருகின்றன. இந்த நிலையில், தேமுதிக திடீரென திமுக பக்கம் கூட்டணி வைத்ததால், ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பெரிய தலைகள் மட்டும் எந்தப் பக்கம் செல்லும் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் செயல்பட்டு வந்தது. தவிர, அவர் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. இருப்பினும், எந்தவித முடிவும் எடுக்காமல் ஓபிஎஸ் காலம் தாழ்த்தி வந்தார். அதேநேரத்தில், தேர்தல் நெருங்குவதைக் கருத்தில் கொண்டு அவருடைய ஆதரவாளர்கள் திமுக மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகளில் போய்ச் சேர்ந்தனர். இந்த நிலையில் ஓபிஎஸ் காலம் தாழ்த்துவதால், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் விரைவில் புதிய கட்சி தொடங்கப்படும் என மாவட்டச் செயலாளர் ஆர்.வி.ரஞ்சித் குமார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கினார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களுடன் பயணித்த பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், தற்போது புதிய கட்சியை தொடங்கிய அவர், இது தேர்தலுக்கான இயக்கம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஒருபுறம் அடையாள அரசியல், ஒருபுறம் கொள்கை அரசியல் சூறாவளிபோல அடித்து வருவதால், அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கட்சி தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உடனான அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாக, பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்த அவரிடம், ஓ. பன்னீர்செல்வம் உடனான உறவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அரசியல் என்பது ஒருவருக்காக அல்ல எனக் கூறியதோடு, ஓ.பன்னீர்செல்வத்துக்காக வாழ்நாளை இழக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் எந்த ஆதரவுமில்லாமல், யாருடனும் செல்லாமல் இருப்பதால் அவருடைய எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.