பெ. சண்முகம் X
தமிழ்நாடு

2 நாளில் அணை நிரம்பியது எப்படி? காவிரி கண்காணிப்பு குழுவின் லட்சணம் இது தானா? - பெ. சண்முகம் கேள்வி

கபினி அணையில் நீர்வரத்து அதிகரித்ததால், 25,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. விரைவில் அணைகள் நிரம்பும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அணைகளில் தண்ணீரே இல்லை என கூறிய நிலையில், 2 நாளில் அணை நிரம்பியது எப்படி? - பெ. சண்முகம்

Premkumar S

காவிரி நீர் தொடர்பான பிரச்னை தமிழ்நாடு - கர்நாடக இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், சமீபத்தில் டெல்லி காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் கூட்டம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கன அடி வீதம் நீர் திறக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், குறைவான மழைப்பொழிவு காரணமாக தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா கூறியதுடன் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை. இந்தசூழலில் தான், மேகதாது விவகாரம் மற்றும் காவிர் நீர் திறப்பு குறித்து பேசுவதற்காக தமிழக முதல்வர் விஜய் கர்நாடக செல்லவிருந்த நிலையில், அவரது பயணம் ரத்தாகியிருக்கிறது.

கபினி அணை

இந்தசூழலில் தான், கேரளா மற்றும் கர்நாடகா பகுதியில் பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவு அதிகரித்திருப்பதன் காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இதனால், நேற்று 25 ஆயிரம் கன அடிநீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட்டிருக்கிறது. தொடர்ந்து, கர்நாடகா அணைகள் நிரம்பும் சூழல் இருப்பதாகவும், கடையடைப்புகளை திரும்பப் பெறவேண்டும் எனவும் கன்னட அமைப்புகளை அம்மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் வலியுறுத்தியிருந்தார்.

இந்தசூழலில் தான், அணைகளில் தண்ணீரே இல்லை என கூறிய நிலையில், 2 நாளில் அணை நிரம்பியது எப்படி? என சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கர்நாடகாவில் உள்ள கபினி அணையிலிருந்து இன்று வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பும் என்று கர்நாடக முதலமைச்சரே சொல்லியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 3,500 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டபோது, “கர்நாடக அணைகளில் தண்ணீரே இல்லை; குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்படும்” என்று கூறி கர்நாடக அரசின் பிரதிநிதிகள் தண்ணீர் திறந்து விட முடியாது என்றனர். இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.