மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் தாய்க்கழகம் திரும்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற இவ்விழாவில் அதிமுக மற்றும் அமமுக கட்சிகளைச் சார்ந்த ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தார். இதையடுத்து, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அவர் இழைத்துவிட்டதாக அதிமுகவில் இருந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் தான், ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் இணையும் விழா மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த முதல்வர் ஸ்டாலினை ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்தர நாத் ஆகியோர் வரவேற்றனர். இவ்விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில், ”50 ஆண்டுகளுக்கும் மேலான தனது அரசியல் பயணத்தில் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாகவும், கட்சியின் கொள்கைக்கு நேர்மையாகவும் இருந்து வழங்கப்பட்ட பொறுப்புகளை மனசாட்சியுடன் நிறைவேற்றினேன்.
தாம் இருந்த இயக்கத்தில் தனி அணியை அமைப்பது குறித்து ஒருபோதும் எண்ணியது இல்லை. கட்சியின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அரசியல் பணியை தொடர்ந்து செய்து வந்ததேன். எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக தற்போது அதன் ஆரம்ப நோக்கத்திலிருந்து விலகிவிட்டது. தொண்டர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, திராவிட சித்தாந்தம் மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தும் திமுக தலைமையை ஏற்று, அந்தக் கட்சியில் ஒரு சாதாரண தொண்டனாக இணைந்துள்ளேன்.
தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வரலாறு படைக்க வேண்டும். பேரறிஞர் அண்ணா கூறிய மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற கருத்தின்படி, தன்னையும் தன்னுடன் பயணித்தவர்களையும் அன்புடன் அரவணைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. மேலும், திமுகவுடன் தாம் இணைந்தது சிலருக்கு பதற்றத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், எதிரணியின் வெற்றி வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது” எனவும் பேசியுள்ளார்.