ஓபிஎஸ், டிடிவி தினகரன் Pt web
தமிழ்நாடு

’முகத்திரை கிழிந்துவிடும்..’ OPS-க்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை.!

ஓ. பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள டிடிவி தினகரன் ”என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், அவர்களது முகத்திரை கிழிந்து விடும்” எச்சரித்துள்ளார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட்டுவருகிறார். இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் என்.டி.ஏ கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்திருக்கும் அவர், ”அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறியவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு அளிக்கவில்லை என்றால் அவர்களது முகத்திரை கிழிந்துவிடும் எனக் காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

டிடிவி தினகரன்

தொடர்ந்து, நாங்கள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைந்துள்ளோம், ஒருசிலர் வெளியில் உள்ளனர். அவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் அவர்களை தமிழக மக்கள் புறந்தள்ளி விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தங்களுக்கு ஆதாயம் பார்க்காமல் ஆதரவளிக்க வேண்டும் என ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு தினகரன் பதிலளித்திருப்பதன் மூலம், தனித்து செயல்பட்டு வரும் ஓபிஎஸ் என்.டி.ஏ கூட்டணியில் இணைவதற்கு நிபந்தனை விதித்தாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த மாதம் மீண்டும் அக்கூட்டணியில் இணைந்தது பேசுபொருளாகியிருந்தது.

ஓ. பன்னீர் செல்வம்

அதேசமயம், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கூறி வரும் வேளையில், அவரின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இவ்வாறு, தனித்து விடப்பட்டிருக்கும் ஓ. பன்னீர் செல்வத்தை மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு கொண்டு வர டிடிவி தினகரன் முயற்சி மேற்கொள்வார் எனக் கூறப்பட்டது. இந்த சூழலில்தான், இன்று ஓ. பன்னீர் செல்வம் குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு “முகத்திரை கிழிந்து விடும்” என ஓ.பி.எஸ்-ஐ எச்சரிக்கும் வகையில் தினகரன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.