கொலை
கொலை file image
தமிழ்நாடு

கடலூர் | 6 சவரன் நகையை கொள்ளையடித்து மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள்

webteam

விருத்தாசலம் - கே.ஆர்.ராஜா

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள டி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னபொண்ணு (70). இவர் தனக்கு சொந்தமான டி. ஏந்தல் கிராம எல்லையில் உள்ள விவசாய நிலத்தில் கொட்டகை கட்டி வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் மூதாட்டியின் உறவினர்கள், அவருக்கு உணவு கொடுப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது கழுத்துப் பகுதியில் காயத்துடனும் உடல் முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டும் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்துள்ளார்.

மேலும் அவர் அணிந்திருந்த செயின், தோடு உள்ளிட்ட 6 சவரன் தங்க நகைகள் திருடு போனதும் தெரியவந்துள்ளது. தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை செய்த தடயங்களை அழிப்பதற்காக கொலைகாரர்கள் உடல் முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவி சென்றுள்ளார்களா? விளைநிலம் தொடர்பான பிரச்னைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்துள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.