தமிழ்நாடு

கோயிலின்ஒரு செங்கலைக்கூட அகற்றக்கூடாது: இந்துஅறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

webteam

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஒரு கோயிலில் இருந்தும் ஒரு செங்கலைக்கூட அகற்றக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்கள் சீரமைப்பு பணிகளுக்காக குழு அமைப்பது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களில் ஒருவரான ரங்கராஜன் நரசிம்மன், கரூர் மாவட்டம், கார்வழி என்ற இடத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்லாண்டிண்டியம்மன் கோயிலை இடிக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இதனை கேட்ட நீதிபதிகள், இந்தக் கோயிலை எதற்காக இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது? இதேபோல் எத்தனை கோயில்களை இடிக்க அறநிலையத்துறை திட்டம் வைத்துள்ளது? என்று கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர், இந்தக் கோயிலை இடிப்பதற்கு உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்தக் கோயில் மட்டுமல்லாமல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த கோயிலிலும் ஒரு செங்கலைக்கூட அகற்றக்கூடாது என்றும், இதை அறநிலையத்துறை ஆணையர் மூலம் இணை ஆணையர் மற்றும் அனைத்து கோயில் செயல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, விசாரணையை நவம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.