ஜே.சி.டி.பிரபாகர் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

தவெகவுக்கு ஆதரவு | தப்பித்த 21 அதிமுக எம்.எல்.ஏக்கள்.. 4 பேர் மீது விசாரணை!

கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

Prakash J

அதிமுக தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு இரண்டு குழுக்களாகச் செயல்பட்டது. அப்போது எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 பேர் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதுதொடர்பான விவகாரத்தில் அதிமுகவின் 21 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் இல்லை என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தற்போது தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு மீது பரபரப்பான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, தவெக அரசுக்கு ஆதரவாக 144 உறுப்பினர்கள் வாக்களித்து இருந்த நிலையில், தமிழக வெற்றி கழக அரசு வெற்றி பெற்றது. அதில், எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 25 எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இபிஎஸ், சண்முகம், வேலுமணி

இதையடுத்து, அதிமுக கொறடாவை மீறி வாக்களித்த அந்த எம்.எல்.ஏக்கள் உள்பட 29 பேரின் மாவட்டச் செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பதவி நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார். மேலும், 25 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு அளித்திருந்தார். இதற்குப் போட்டியாக, எடப்பாடி கே.பழனிசாமி உட்பட 22 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் வேலுமணி தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, வேலுமணி தரப்பைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியிலிருந்து விலகி தவெகவில் போய் இணைந்தனர்.

இன்னொரு புறம், பல்வேறு பேச்சுவார்த்தைக்குப் பிறகு வேலுமணி தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஒன்றிணைந்தது. இதையடுத்து, இருதரப்பும் இணைந்துபோய் தாங்கள் கொடுத்த கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்தனர். மேலும், வேலுமணி தரப்பினர் அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவளித்ததற்கு வருத்தம் தெரிவித்து முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கினர். இதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகரும் தெரிவித்திருந்தார்.

ஜே.சி.டி.பிரபாகர்

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், ”25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் முதலில் மனு அளிக்கப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி 4 கடிதங்களை அனுப்பியுள்ளார். 4 கடிதத்தையும் முறையாக பரிசீலித்து ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டேன். அதன்படி, தவெகவிற்கு ஆதரவு அளித்த 21 அ.தி.மு.க. எம்எல்ஏக்களையும் மன்னிப்பதாக எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்தததை தொடர்ந்து அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை இல்லை. கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததற்காக பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. 4 பேர் மீதான நடவடிக்கை முடிந்ததும் அறிவிப்பேன். தவெக அரசுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தது செல்லுபடியாகும்” என்றார்.jcd prabhakar