தமிழகத்தில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற இருக்கிறது. இதையடுத்து, தமிழகத்தில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்கிற பரபரப்பு தொற்றியுள்ளது.
ஆனந்தன் செய்தியாளர்
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று நாளை (மே 4) வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு 62 மையங்களில் தொடங்க இருக்கிறது. இதுவரை சந்திக்காத தேர்தலை தமிழகம் சட்டமன்றம் சந்தித்திருக்கிறது. மிகப்பெரிய அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெற்றிவாய்ப்பு யாருக்கு கிட்டும் என எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது. இதில் பலர் வாக்குப்பதிவுக்குப் பிறகு பலவிதமான கருத்துகளைத் திணித்து பேசி வருகின்றனர். ஆனால் சமீப நாட்களாக ஊடகங்களில் பார்க்கும்போது சில பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு கட்சியின் சார்ந்து பேசும்போது ஊடக அரணை மறந்து தங்களுக்கு விருப்பமான இயக்கத்தின் முகமாகப் பிரதிபலிப்பது அரங்கேறி வருகிறது.
அதற்கான தளத்தைச் சமூக ஊடகங்கள் வழங்குகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் எல்லா மாநிலங்களிலும் முத்திரை பதித்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் எந்தவொரு முகாந்திரமும் இல்லாத தேர்தலாக இருந்தாலும் முத்திரை பதிக்கும் இடத்தில் அவர்கள் இருப்பார்களோ என்று தோன்றுகிறது. இதுவரை தமிழக சட்டசபை வரலாற்றில் யாருடைய தயவிலும் ஆட்சி அமையவில்லை, கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகு, கூட்டணிக்கு ஆதரவு என்று கூறி ஆட்சி அமைந்தது உண்டு.
ஆனால் இந்தமுறை ஒரு புதுவிதமாக தமிழக அரசியல் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்று தோன்றுகிறது. அப்படி ஓர் இயக்கத்திற்கு பெரும்பான்மை கிடைக்காதபோது அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று உற்றுக் கவனித்துப் பார்த்தால் களத்திலேயே இல்லாத பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறிது காலம் தமிழகத்தைக் கோலோசிக்குமோ என்றும் தோன்றுகிறது.
ஒவ்வொரு முறையும் தமிழக சட்டமன்றத் தேர்தல் இரண்டு மற்றும் மூன்று முனைப் போட்டி என்று தேர்தலைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த முறை, நான்கு முனைப் போட்டியை தமிழகம் சந்தித்து இருக்கிறது. தேர்தல் பிரசார களத்தில் ஒவ்வோர் அரசியல் கட்சித் தலைவர்களும் பேசும்போது தீய சக்திக்கும் தூய சக்திக்கும் போட்டி என்றும், பாரதிய ஜனதா கட்சியின் பி - டீம் என்றும் இப்படி ஒவ்வொருவரும் தனித்துவமாக அவர்களுக்கு ஏற்றதுபோல பிரசாரத்தைச் செய்துவந்தார்கள். ஆனால், இதற்கும் மேல் ஒருசக்தி இருக்கிறது என்று இந்த தேர்தல் காட்டப் போகிறது. அந்த சக்தி, தமிழ்நாட்டுக்கு வந்த கஜா புயல் போல இருக்குமோ என்றும் தோன்றுகிறது.
அந்தப் புயல், சுமார் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கும் என்றும் தோன்றுகிறது. அதன்பிறகு அந்தப் புயலை புரட்டி மேலும் ஒரு புதிய புயல் வரும் என்றும் நம்பப்படுகிறது.