கடந்த தேர்தலில், தனித்துத் தேர்தலைச் சந்தித்த விஜயின் தவெக, ஆட்சியைக் கைப்பற்றியது. தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, ஐயூஎம்ல் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து விலகி ஆதரவு அளித்தன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணிக்கு, ’மதச்சார்பற்ற சமூநீதி வெற்றிக் கூட்டணி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் கட்சிகள் கூட்டணிகள் அமைப்பது என்பது அரசியலின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. அது, தமிழ்நாட்டிலும் தொடர்கிறது. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ அமைக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, ஐயூஎம்ல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றிருந்தன. மறுபுறம், அதிமுக தலைமையில் ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற பெயரில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன.
இந்தச் சூழலில், கடந்த தேர்தலில், தனித்துத் தேர்தலைச் சந்தித்த விஜயின் தவெக, ஆட்சியைக் கைப்பற்றியது. முன்னதாக, தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, ஐயூஎம்ல் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து விலகி ஆதரவு அளித்தன.
இந்த நிலையில் அதைத் தொடரும் வகையில், அக்கூட்டணி தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை ஒன்றாகச் சந்திக்கவுள்ளன. அதற்கான ஆயத்த வேலைகளிலும் அக்கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில், தவெக தலைமையில் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தவெக தலைமையிலான கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மை கோட்பாடுகளை முதன்மையாகக் கொண்டு இக்கூட்டணிப் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.