செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா
நெல்லை மாவட்டம் பரப்பாடி அடுத்த இலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுக பெருமாள் என்பவரின் மனைவி ஆதிலட்சுமி (32) கணவனை இழந்து வாழும் இவர், இன்று காலை இலங்குளம் அருகில் உள்ள விவசாய பம்புசெட் கிணறு அருகே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக 100 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரது சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்றவர்கள் உடனடியாக நாங்குநேரி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நாங்குநேரி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் உடனடியாக வந்து கிணற்றுத் தண்ணீரில் தத்தளித்த ஆதிலட்சுமியை பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து மீட்கப்பட்ட அந்தப் பெண்ணை முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் விழுந்த பெண்ணை விரைந்து வந்து பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.