தமிழகத்தில் 108 இடங்கள் பெற்ற தவெக கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காதது அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக முன்னாள் தலைமை நீதிபதி முகுல் ரோஹத்கி குற்றம்சாட்டுகிறார். அதிக இடங்கள் பெற்ற கட்சித் தலைவரை முதலில் அழைப்பது அரசியலமைப்பு மரபு எனவும், சிறுபான்மை அரசாங்கமும் நிலைத்திருக்க முடியும் என நரசிம்மராவ் அரசை எடுத்துக்காட்டாக கூறுகிறார்.
தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்காக கடந்த 4 நாட்களாக தமிழக வெற்றிக்கழகம் போராடி வருகிறது. 108 இடங்களை கைப்பற்றிய அக்கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அர்லேகர் அழைக்காமல் குழப்பிவரும் சூழலில், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு பெற்று 116 இடங்கள் தவெக வசம் தற்போது உள்ளது.
இந்நிலையில் திருமாவளவன் தலைமையிலான விசிக இதோ ஆதரவை தருகிறோம் என 2 நாட்களாக இழுத்தடித்து வருகிறது. முதலில் இடதுசாரிகள் முடிவை விசிக ஆதரிக்கும் என தெரிவித்திருந்த திருமாவளவன், இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்துவருகிறார்.
இந்தசூழலில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் நிறைவேற்றப்படும் சூழல் இருப்பதால், தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கும் என அதீத குழப்பம் நீடித்துவருகிறது.
இந்நிலையில் தான் ஆளுநர் விஜயை ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும் என கூறும் முன்னாள் தலைமை நீதிபதி முகுல் ரோஹத்கி, தவெக உச்சநீதிமன்றத்தை நாட வாய்ப்புள்ளதாகவும், மறு தேர்தல் வைத்தால் அது தமிழக அரசியலில் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “என்னைப் பொறுத்தவரை, ஆளுநர் விஜய்யை முதல் நாளிலேயே வந்து ஆட்சி அமைக்கச் சொல்லியிருக்க வேண்டும். பெரும்பான்மையை விட பத்து இடங்கள் குறைவாக இருந்தாலும்கூட, அது ஒரு பொருட்டல்ல. அரசியலமைப்பு மரபுகளின்படி, மிகப்பெரிய கட்சியின் தலைவரை அழைக்க வேண்டும் என்பது நிலைநிறுத்தப்பட்ட சட்டமாகும். அவர் ஆதரவைத் திரட்டி, ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்கப்படுகிறார். இதுதான் நடைமுறை, கடந்த காலத்திலும் இது எப்போதும் செய்யப்பட்டே வந்துள்ளது. சில நேரங்களில் வாய்ப்பு வழங்கப்படும், ஆனால் அந்த நபரால் பெரும்பான்மையைப் பெற முடியாது; சில நேரங்களில், நேரம் கொடுக்கப்படும்போது, அவர்கள் அதை நிரூபிப்பார்கள்.
நினைவில் கொள்ளுங்கள், மற்றவர்கள் வாக்களிக்காமல் இருந்தால்கூட ஒரு சிறுபான்மை அரசாங்கம் செயல்பட முடியும், இதற்கு சிறந்த உதாரணம் மக்களவையில் நரசிம்ம ராவ் அரசாங்கம், அது சிறுபான்மையாக இருந்தபோதிலும் நீண்ட காலம் நீடித்தது.
இப்போதுள்ள பிரச்சனை என்னவென்றால், ஆளுநர் சட்டமன்றத்தின் பங்கை ஏற்றுக்கொண்டு, 118 அல்லது அந்த எண்ணிக்கை எதுவாக இருந்தாலும் அதற்கான ஆதாரத்தைக் கோரி ஒரு நெருக்கடியை உருவாக்குகிறார். அது முற்றிலும் தவறு. இவ்வளவு பெரிய தேர்தலுக்குப் பிறகு, ஒரு புதிய தேர்தலையோ அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியையோ எதிர்கொள்வது என்பது... யாரும் இதை விரும்பவில்லை. மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். தேர்தல்களுக்காக ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்படுகின்றன, பெரும் மனிதவளமும் நேரமும் முதலீடு செய்யப்படுகின்றன. பிறகு, 108 அல்லது 110 இடங்களைப் பெற்ற ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். அப்படி ஒருபோதும் நடந்ததில்லை” என கூறியுள்ளார்.