பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாடு வரவுள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று மதியம் 3 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி மதுராந்தகத்தில் 7 அடுக்கு பாதுகாப்புடன் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தான், தேர்தல் சீசன்களில் மட்டுமே மோடி தமிழகம் வருவதாக விமர்சித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், ”தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் கல்வி நிதி எப்போது வரும்? தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் ”ஜி ராம் ஜி” கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.