mk stalin x page
தமிழ்நாடு

”தோல்விக்கு நானே பொறுப்பு..” திமுக மா.செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின்!

”செயல்பட முடியாது என நினைக்கும் திமுக நிர்வாகிகள் மனப்பூர்வமாக முன்வந்து விலகிக் கொள்ளுங்கள்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Prakash J

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், திமுகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிக்கட்சியாக உருவான தவெக, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இந்தத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய பெரிய திராவிடக் கட்சிகள் இரண்டும் வீழ்த்தப்பட்டன. இருதரப்பிலும் பல முன்னாள் அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் தோல்வியடைந்தார். எனினும், திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இந்த நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், திமுகவின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி, மாயாஜால சுனாமி; சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது; பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் சொல்கிறேன் எங்கே கோளாறு? எங்கே மெத்தனம் என்பதுதான் முக்கியம்; அதை ஆய்வு செய்தாக வேண்டும்; இது தேர்தல் சுழல்தானே தவிர, நாமெல்லாம் எழுந்திருக்கவே முடியாத தோல்வி கிடையாது. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்; தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் கிடையாது; அதுதான் நியாயம். நீங்களும் இந்த தோல்விக்காக அடுத்தவர் மீது பழிபோட வேண்டாம்; தோல்வியின்போது ஆதங்கத்தைக் கொட்டுவது இயல்பு; அது பழியாக இருக்கக்கூடாது; தோல்வி குறித்து ஆய்வு செய்வது அவசியம்தான்; ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக்கூடாது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேர்தல் தோல்வி குறித்து தொண்டர்கள் கருத்து சொல்ல ஏதுவாக தனி இணையதளம் தொடங்கப்படும். திமுக செய்த தவறுகள் குறித்தும் எதிர்பார்க்கும் மாற்றங்கள் குறித்தும் தொண்டர்கள் கருத்து சொல்லலாம். கள ஆய்வு நடத்தி அறிக்கை தருவதற்காக திமுக சார்பில் குழு அமைக்கப்படும்; குழுவின் அறிக்கையும், மக்களின் கருத்துகளும் கிடைத்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.சமூக வலைதளங்கள் மிகப்பெரிய களமாக உருவெடுத்திருப்பது இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தெரியவந்துள்ளது. தொழில்நுட்பங்களை கையாள்வதில் திமுகவினர் இனிமேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். திமுகவினர் ஒவ்வொருவரும் சமூக வலைதளங்களில் நேரடியாக பங்கெடுத்து செயல்பட வேண்டும்.

இனிமேல் நமது பரப்புரை ஸ்டைல், செயல்பாடுகள் எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டும். டீக்கடையில் பேசிய அரசியலை சமூக வலைதளத்தில் பேச வேண்டும். திமுக அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறேன். அந்த மாற்றம்தான் கட்சியை இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு உயிர்ப்போடு வைத்திருக்கும். கட்சி அமைப்பில் மாற்றம் செய்யும்முன் நாம் முதலில் மாறியாக வேண்டும்; இதில் யாரும் விதிவிலக்கல்ல. இனிமேலாவது கோஷ்டி அரசியலை விட்டுவிட்டு அனைவரையும் அரவணைத்துப் போக வேண்டும். செயல்பட முடியாது என நினைக்கும் திமுக நிர்வாகிகள் மனப்பூர்வமாக முன்வந்து விலகிக் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.