தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி நிலவிவருகிறது. தொடர்ந்து, 2வது முறையாக மீண்டு ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் ஆளும் திமுக கூட்டணி தேர்தல் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வரும் வேளையில், வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளான நேற்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் பரப்புரையை மார்ச் 31-ல் (இன்று) திருவாரூரில் தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை தனி விமான மூலம் தஞ்சை வந்த ஸ்டாலின், சாலை மர்க்கமாக திருவாரூருக்கு வந்தடைந்தார். தொடர்ந்து, சன்னதி தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் ஓய்வெடுத்தார். பின்னர். மாலை 6.30 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது, கீழ வீதி, வடக்கு வீதி, மேல வீதிகளில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் நீண்ட வரிசையில் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, பரப்புரை மேடைக்கு சென்ற அவர் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி ஆகிய 4 தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பரப்புரையைத் தொடங்கியிருக்கிறார். அதன்படி, பரப்புரைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கலைஞரை வளர்த்தெடுத்த திருவாரூரில் இருந்து பரப்புரையைத் தொடங்குகிறேன். திருவாரூர் என்றாலே அது திமுக ஊர் எனத் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி வேட்பாளர் டிஆர்பி ராஜா, நன்னிலம் தொகுதியின் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக், திருத்துறைப்பூண்டி வேட்பாளர் சிபிஐ கட்சியின் மாரிமுத்து ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து பேசுகையில், திமுக அரசு எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்ததோ; அப்போதெல்லாம் திருவாரூருக்கு நிறைய செய்திருக்கிறோம் எனத் தெரிவித்த அவர், திரூவாரூரில் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கிப்பேசினார். மேலும், ”தன்மேல் நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தீர்கள். முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதில் இருந்து, மகளிர் விடியல் பயணம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. மகளிர் உரிமைத் தொகையின் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. தமிழ்ப்புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழ்நாடு பல விதங்களில் மேலே வந்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விளக்கி முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.